புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4ஆவது நபர் திங்கள்கிழமை குணமடைந்ததைத் தொடர்ந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிரட்டு நிலையைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு முதன்முதலாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு சில நாட்கள் கழித்து, கோயம்பேட்டில் இருந்து வந்த லட்சுமி புரத்தைச் சேர்ந்த 60 வயது ஆணுக்கும், சென்னையிலிருந்து வந்த 13 வயது ஆயிங்குடி சிறுமிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மூவரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மிரட்டு நிலை இளைஞர் கடந்த மே 6ஆம் தேதியும், ஆயிங்குடி சிறுமி மே 13ஆம் தேதியும் குணமடைந்து வீடுதிரும்பினர்.
இதற்கிடையே மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, புதுக்கோட்டைப் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கடந்த மே 14ஆம் தேதி குணமடைந்து, வீடு திரும்பினார். இந்த நிலையில், திருச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினார்.
புதுக்கோட்டையில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட 7 பேரில் குணமடைந்து வீடு திரும்புவோரில் இவர் நான்காவது நபராவார். மீதமுள்ள 3 பேருக்கும் புதுக்கோட்டையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்