சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரங்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.8) முதல் நீட்டிக்கப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், பணியாளர்கள், மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (நவ.08) ஞாயிற்றுக்கிழமை முதல் நீட்டிக்கப்படுகின்றன.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசுப் பொது விடுமுறை நாள்களில் மெட்ரோ ரயில்க சேவைகள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உச்ச மணி நேரம் இல்லாமல் இயங்கும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காகவும் மேற்கொண்டுள்ள பயணச்சீட்டு வழங்கும் முறை மற்றும் அனைத்து விதிமுறைகளையும் பயணிகள் பின்பற்றி முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.