செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
பாஜக சார்பில் கடலூரில் நடத்தப்படும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். கார் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, கண்டெய்னர் லாரி உரசி கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குஷ்பு காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில், குஷ்பு லேசான காயத்துடனும், மற்றவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்து குஷ்பு கூறியதாவது:
கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக காரில் சென்றுகொண்டிருந்த போது, மேல்வருவத்தூர் அருகே ஒரு கண்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அனைவரும் காயமின்றி தப்பித்தோம். காரின் கண்ணாடி உடைந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
''உங்கள் ஆசீர்வாதங்களாலும் கடவுளின் கிருபையினாலும் நான் காப்பாற்றப்பட்டுள்ளேன். கடலூர் வேல்யாத்திரையில் பங்கேற்க சென்றுகொண்டிருந்த எங்களை அந்த முருகன்தான் காப்பாற்றியுள்ளார். என் கணவர் வணங்குகின்ற தெய்வம் எங்களை கைவிடவில்லை''.
விபத்துக்கு பின்னர் வேல் யாத்திரையை தொடர்கிறீர்களாக என்று கேட்டதற்கு, கடவுள் முருகனே என்னை சந்தித்துவிட்டு செல் என்று கூறிய பிறகு, நாங்கள் ஏன் நிற்க வேண்டும் என்று தெரிவித்த குஷ்பு, மாற்று கார் ஏற்பாடு செய்து கடலூர் புறப்பட்டு சென்றார்.