புதுக்கோட்டை: அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
அரசுப் பள்ளியில் படித்தோருக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டப்படி, புதுக்கோட்டையைச் சேர்ந்த 11 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயில இடம் கிடைத்தது.
இதன்படி, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, குமரி, நெல்லை மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்கள் சேர்ந்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம்பெற்ற 11 அரசுப் பள்ளி மாணவர்கள்.
இதற்கிடையே இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தாம் ஏற்பதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
இதன்படி, தலா ரூ. 50 ஆயிரத்துக்கான (மொத்தம் ரூ. 5.50 லட்சம்) காசோலைகளை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.