பொதுவாக புயல் காலங்களில் 1 முதல் 11 வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம்.
இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள். ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள்.
இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
இதையும் படிக்கலாமே.. 24 மணி நேரத்துக்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு
3-ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பெய்யும். வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு, துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதை குறிக்கும்.
அதேபோல ஐந்தாம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதை குறிக்கிறது. அதோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
புயல் வலதுபக்கமாக கரையைக் கடக்கும் போது, துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும் என்பதை குறிப்பது ஆறாம் எண் புயல் கூண்டு ஆகும்.
ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
இதையும் படிக்கலாம்.. வங்கக் கடலில் உருவானது நிவர் புயல்
நிவர் புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு?
எட்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்.
9-ஆம் எண் கூண்டுக்கு, புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். 10-ஆம் எண் கூண்டு ஏற்றப்படுமானால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் போது பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது.
11-ஆம் எண் கூண்டு தான் உச்சபட்சமானது. இது எதற்கு ஏற்றப்படுகிறது என்றால் வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.