தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் அரசு மேல்முறையீடு

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. 

News image
உயர்நீதிமன்ற கிளை
Updated On :13 அக்டோபர் 2020, 9:26 am

DIN

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. 

திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் குற்றவாளியை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் குற்றவாளி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார். 

அதன்படி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மதுரைக்கிளையில் நீதிபதிகள் கல்யாண சுந்தரம், சுந்தரவள்ளி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து குற்றம்சாட்டப்பட்ட நபர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி விடுதலை

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அடுத்துள்ள ஜி.குரும்பப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். அவரது 12 வயது மகள், வாயில் மின் வயரை கடித்த நிலையில் மர்மமான முறையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அதே நேரத்தில், அந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் நகக் கீறல்கள், காயம் இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென உயிரிழந்தது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு காரணமான அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிறுமியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வந்த வடமதுரை காவல்துறையினர், ஜி.குரும்பப்பட்டியைச் சேர்ந்த தங்கராசு மகன் கிருபானந்தம்(19) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட நீதிபதி புருஷோத்தமன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், கிருபானந்தம் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்வதாக அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.