திருமாவளவன், ஸ்டாலின் வெளியில் நடமாட முடியாது: எல்.முருகன்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிவேல் யாத்திரைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மக்கள் கரோனா தொற்றில் இருந்து விடுபட மிகப்பெரிய அளவில் வெற்றிவேல் யாத்திரை நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், பாஜகவினர் பலர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். அத்வானியின் ரத யாத்திரை போன்று வெற்றிவேல் யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தப்பு செய்பவர்களை காப்பாற்றுவதுதான் ஸ்டாலினின் வேலை. பட்டியலின மக்கள், பெண்களை கேவலப்படுத்துவோரை கண்டிக்காமல் இருப்பது தான் திமுகவின் சமூக நீதி.
பெண்களை கொச்சைப்படுத்தும் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்கும்வரை வெளியில் நடமாட முடியாது. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக சகோதரிகள் அவர்களுக்கு பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் பாஜகவினரை சட்டப்பேரவைக்கு அனுப்புவதே எனது வேலை, அந்த வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.