இந்தியாவிலேயே தமிழ்நாடு மருத்துவத் துறையில் ஒரு முன்னோடியாக திகழ்கிறது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, வடபழனியில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது,
மேலைநாடுகளை விடக் குறுகிய காலத்தில் கரோனாவில் இருந்து மக்களை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். மிகச்சிறந்த மனிதவள கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதால் நாட்டின் மருத்துவ தலைநகரமாக தமிழகம் உள்ளது.
இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
11 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,650 மருத்துவப் பட்டப் படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அம்மாவின் அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.