சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயிர்ல நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் நீல வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் செப்டம்பர் 7-ஆம் தேதி துவங்கியது.
இதனைத் தொடர்ந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ செல்லும் பச்சை வழித்தடத்தில் ரயில் சேவைகள் இன்று தொடங்கின.
பொதுமக்கள், மெட்ரோ பயணிகள் மற்றும் உள்நாட்டு / வெளிநாட்டு பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 10-ம் தேதி முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்றும், அதிகப் பயணிகள் வரும் காலை 8.30 - 10.30 மணிக்கும், மாலையில் 5-8 மணி வரையிலும் 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலைய மெட்ரோ செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் செப்டம்பர் 10-ம் தேதி வியாழக்கிழமை முதல் இயக்கப்படும்.