சென்னை: அக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயலும் மாணவ, மாணவிகளில் விருப்பப்படும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்றும், பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் மாணவர்கள் வந்து, பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்டுச் செல்லலாம் என்றும், பள்ளியில் பணியாற்றும் 50 சதவீத ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.