மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் குவளைவேலி ஊராட்சியில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது. இதைப் பழுதுநீக்கிப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குவளைவேலி ஊராட்சியில் வசிக்கும் மக்களின் தாகம் தணிக்க அமைக்கப்பட்ட குடிநீர் திட்டத்திலிருந்து விநியோகம் செய்யப்படும் தண்ணீர் உவர்ப்புத் தன்மையுடன் இருந்ததால் இந்த ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கடந்த சில மாதங்களுக்கு முன் ஊராட்சி நிதி மூலம் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் (பியூர் வாட்டர் பிளாண்ட்) அமைக்கப்பட்டது.
இந்தக் குடிநீர் இயந்திரத்திலிருந்து குவளைவேலி கிராம மக்கள் குடிநீர் பிடித்துச் சென்று பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதுவரை இந்த இயந்திரம் சரி செய்யப்படாத நிலையில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியாமல் கிராம மக்கள் உப்புத் தண்ணீரையே குடிநீராகவும் பயன்படுத்தி வரும் நிலை உள்ளது.
இது குறித்து குவளைவேலி ஊராட்சித் தலைவர் ரவி கூறுகையில், பழுதாகிப்போன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தைப் பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மானாமதுரை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. இதனால் பழுதாகிக் கிடக்கும் மேற்கண்ட இயந்திரம் மேலும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே விரைவில் இந்த இயந்திரத்தை பழுது பார்த்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.