சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 43 இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் 43 இடங்களில் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 43 இடங்களில் மொத்தம் 9 லட்சம் மக்கள் இருக்கின்றனர். தொடர்ந்து சென்னை முழுவதும் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. ஆய்வில் யாருக்காவது கரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும்.
சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த இருவருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கரோனா இல்லை.
சென்னையில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணியில் தன்னார்வலர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். மேலும், 100 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என்ற வகையில் கணக்கெடுப்பு நடக்கிறது' என்று தெரிவித்தார்.