தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19 மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று காலை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவர் பிரதீபா கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது. கரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு என்ன தேவை? என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்.
இந்த சூழ்நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசு அக்கறை காட்டி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, எனவே, மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது என்று தெரிவித்தார்.