தமிழகத்தின் தலைநகரான சென்னை கரோனா தொற்றுப் பரவலிலும் தலைநகராகத் திகழ்ந்தது. தற்போது சென்னையில் கரோனா தொற்று மெல்ல குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் கரோனா வேகமாகப் பரவி வருவது கவலையை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 87,235 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 1298 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,127 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 17% ஆகும்.
இதையும் படிக்கலாம்.. கோடம்பாக்கத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது
அதாவது, கரோனா பாதித்தவர்களில் 70 ஆயிரம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இது மொத்த பாதிப்பில் 81% ஆகும். பலி விகிதம் 1.67 சதவீதமாக உள்ளது. அதாவது சென்னையில் கரோனாவுக்கு இதுவரை 1456 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், சென்னையில் கரோனா பாதிப்புள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். அந்த வகையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 81 ஆகக் குறைந்துள்ளது.