புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு
கரோனா அச்சறுத்தலால் தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை ஏழு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1,75,530 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், 'கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அ
தேபோன்று திரையரங்குகள், வணிக வளாகங்கள் நாளை முதல் மூடப்படுகிறது. புதுச்சேரியில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. புதுச்சேரி எல்லைகளில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் மூடுவது குறித்து 2 நாட்களில் முடிவு செய்யப்படும். மறு உத்தரவு வரும் வரை சண்டே மார்க்கெட் மூடப்படும்' என்று தெரிவித்தார்.