புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து கரோனா தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். புதுக்கோட்டையில் வடமாடு, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதியில்லை என்றும் தொடர்ந்து கரோனா தொற்றைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.