சென்னை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக பல்வேறு துறைகள் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டார்.
அதற்கு தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை பிரதமர் மோடியிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும், பிரதமர், மக்கள் நலன் கருதி, 144 தடை உத்தரவினைக் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டுமென்றும், மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு, மேற்கூறிய அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.