சென்னை: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் என அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சுழல்நிதியை உருவாக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. விவாகரத்துக்கு விண்ணப்பத்திருக்கும் ஐஏஎஸ் நட்சத்திர தம்பதி
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
தமிழக அரசு, அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி, இவ்வாண்டே, மொத்தம் 313 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று, மாணாக்கர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
“அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், இச்செலவினங்களை வழங்குவதற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவினை பிறப்பித்துள்ளேன்” என கடந்த 18.11.2020 அன்று 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் நான் அறிவித்தேன்.
கலந்தாய்வில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்றுள்ள மாணாக்கர்கள், கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தினை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இதனை நான் அறிவித்தேன். மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணாக்கர்களின் கல்விக் கட்டணத்தை உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க நான் உத்தரவிட்டுள்ளேன். அந்நிதியில் இருந்து மாணாக்கர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை தமிழக அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும்.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: ஆர்.பி. உதயகுமார் விளக்கம்
அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து அவர்களின் மருத்துவர் ஆகும் கனவினை நனவாக்கி, சமநீதியை நிலைநாட்டி, வரலாற்று சாதனை படைத்த தமிழக அரசு, நான் 18.11.2020 அன்றே அறிவித்தவாறு, அம்மாணாக்கர்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளையும் ஏற்று, அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அனைவரும் அறிவர்.
இவர்களுக்கு அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும், தி.மு.க. உதவுவதாக தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்கு அறிவர் என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.