ஜெய்ப்பூர்: 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த டினா தாபி - இரண்டாம் இடம் பிடித்த அதர் அமீர் கான் தம்பதி, விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில், இருவரும் ஒருமனதாக விவகாரத்துக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
2015-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து ஊடகங்களில் தலைப்புச் செய்தியானார் டினா தாபி. அவர், அதே தேர்வில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்ற காஷ்மீரைச் சேர்ந்த அமீர் கானை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட போது மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக்கப்பட்டது.
ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, பயிற்சி காலத்தின் போது சந்தித்து காதலை வளர்த்துக் கொண்ட டினா - அதர் காதல் ஜோடி, 2018-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: ஆர்.பி. உதயகுமார் விளக்கம்
திருமணத்துக்குப் பின் காஷ்மீரியின் மருமகள் என்ற அடைமொழியுடன் டினா சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டார். சில அமைப்புகள் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தது. அதரின் குடும்பப் பெயரான கானை, டினா தனது சமூக வலைத்தளங்களின் இடம்பெற்றிருந்த பெயருடன் இணைத்தக் கொண்டார். அது தற்போது வரை நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் காதல் தம்பதியின் வாழ்வில் மனக்கசப்பு ஏற்பட்டது. தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது பற்றி டினா சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தது என்னவென்றால், பிரிந்து வாழும் கணவரின் சமூக வலைத்தளக் கணக்குகளான சுட்டுரை மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை தொடர்வதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருந்தார்.