சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,488 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இது 13,704 ஆக இருந்தது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு வாரத்துக்கு முன்பு வரை 10,000-க்கும் கீழ் குறைந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக 13,000-த் தாண்டியுள்ளது.
சென்னையில் இதுவரை 1,85,573 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,452 பேர் பலியாகியுள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,68,633 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 13,488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அண்ணா நகரில் 1,365 பேரும், கோடம்பாக்கத்தில் 1,214 பேரும், திருவிக நகரில் 1,123 பேரும், தேனாம்பேட்டையில் 1,178 பேரும், அடையாறில் 1,031 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.