பெரியார் கொள்கையை ஒழிக்கவே பாஜக தமிழகத்திற்கு வந்திருக்கிறது என்ற பாஜக எம்.பி.,யின் கருத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்
‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்.
தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார்.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா.
தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை?
தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?
பெரியார் கொள்கையை ஒழிக்கத்தான் பாஜக இங்கு வந்திருக்கிறது என பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா அண்மையில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.