மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு வயல்காட்டில் பம்பு செட் அறையில் படுத்துறங்கிய விவசாயி மறுநாள் காலை படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி அருகே அதிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையா மகன் கரிகாலன் (45), விவசாயியான இவர் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு தனது நிலத்தில் உள்ள பம்புசெட் அறையில் தூங்கச் சென்றார்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை கரிகாலன் உடலில் ரத்த காயங்களுடன் பம்புசெட் அறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக இளையான்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கரிகாலன் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றர்.
இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த இளையான்குடி போலீசார் கொலை தொடர்பாக இளையான்குடி அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு குமாரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.