தமிழக மக்களுக்குத் தடையின்றி கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
''பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர். கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆக்ஸிஜன் பற்றக்குறை இல்லை. அங்கு 240 டன் ஆக்ஸிஜன் கையாளப்படுகிறது.
முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்
கரோனா தடுப்பூசி வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடுப்பு மருந்து வீணாகாமல் தடுப்பூசியை கையாள சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்
மேலும் 6 லட்சம் கரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. புணேவிலிருந்து வந்துள்ள கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்று கூறினார்.