செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பணம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி நிதி நிறுவனம் ரூ .2 கோடிக்கு மேலாக அதிகமாக மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
செங்கல்பட்டு அருகே மேலேரிபாக்கத்தில் எஸ்.ஏ.எஸ். என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை கடனாகப் பெற முன் பணம் செலுத்த வேண்டும். முதல் தவணையாக 1000 ரூபாய், இரண்டாவது தவணையாக 5 ஆயிரம் ரூபாய் என ஒரு லட்சம் ரூபாய் கடனாகப் பெற 6 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும்.
இதேபோல் மகளிர் சுய உதவிக்குழுவினக்கு, ஒரு நபர் 1300 ரூபாய் பணம் செலுத்தினால் 45 ஆயிரம் ரூபாய் கடனாகத் தருகின்றோம் எனக்கூறி செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம், வையாவூர், திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் பகுதிகளில் சுமார் 500-க்கும் அதிகமானோரிடம் 2 கோடிக்கும் அதிகமாக பணத்தை பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்
பணத்தை பறிகொடுத்த படாளம், வையாவூர், செங்கல்பட்டைச் சுற்றியுள்ளவர்கள் செங்கல்பட்டில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். மோசடி செய்த நிதி நிறுவனத்தைக் கண்டித்து செங்கல்பட்டு திருப்போரூர் கூட்டுச் சாலையில் சாலைமறியல் நடைபெற்று வருகிறது.
கரோனா ஊரடங்கு நேரத்தில் வேலையையும் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்த பலர் நிதி நிறுவனத்தை நம்பி பணத்தை பறிகொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.