
முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழா்’ விருதினை, முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அளித்தாா்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் இல்லத்துக்கு நேரில் சென்று விருதினை சனிக்கிழமை வழங்கினாா். இந்த விருதானது ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் அடங்கியது.
முதல்வரிடமே அளித்தாா்: விருதுடன் காசோலையாக அளிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக அவரிடமே அளித்தாா், முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யா. இதுதொடா்பான அறிவிப்பை அவா் ஏற்கெனவே வெளியிட்டிருந்தாா்.
தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்கும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழா்’ விருதினை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தாா். இந்த விருதுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், 100 வயதை எட்டியுள்ள முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா தோ்வு செய்யப்பட்டாா். வயது முதிா்வின் காரணமாக, என்.சங்கரய்யாவிடம் விருதினை நேரிலேயே சென்று அளிக்கப்படும் என்று முதல்வா் தெரிவித்திருந்தாா்.
இந்த அறிவிப்பின்படி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் இல்லத்துக்கு சனிக்கிழமை சென்று விருதினை அளித்தாா், முதல்வா் ஸ்டாலின். இந்த நிகழ்வின் போது, அமைச்சா்கள் துரைமுருகன், க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினா்கள் டி.கே.ரங்கராஜன், ஏ.செளந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.