ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்க்கு குறுகிய கால (1 முதல் 6 மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்கலாமே.. 'நம்பி ஏமாறாதீர்கள்.. இப்படியும் சொல்வார்கள்' காவல்துறை அலர்ட்
மாணாக்கர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ/ மாணவியர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள, தாட்கோவின் http://training.tahdco.com/ என்ற இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியினை கட்டணமின்றி பயிலலாம். பயிற்சி பெறும் மாணவ / மாணவியர்களுக்கு போக்குவரத்து படிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எஸ்சிவிடி அல்லது எஸ்எஸ்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கும் வழிவகை செய்யப்படும்.
மேலும் தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற பயிற்சி தொடர்பாக சுயதொழில் தொடங்கிட, http://application.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்து தொழில்முனைவோர் திட்டம் (இடிபி) மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு (எஸ்இபிஒய்) திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன் பெறலாம்.
அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க ஆவண செய்யப்படும். சென்னை மாவட்ட ஆதிதிராவிட/ பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.