புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காங்கேயம்: தொழிலதிபர் மகன் கடத்தல் சம்பவத்தில் மேலும் இருவர் கைது: மொத்தம் ரூ.2.50 கோடி மீட்பு

காங்கயத்தில் அரிசி ஆலை அதிபரின் மகன் கடத்தல் சம்பவம்: மேலும் இருவர் கைது: மொத்தம் பணம் ரூ.2.50 கோடி மீட்பு

News image
காங்கயத்தில் அரிசி ஆலை அதிபரின் மகன் கடத்தல் சம்பவம்: மேலும் இருவர் கைது
Updated On :24 ஆகஸ்ட் 2021, 1:10 pm

DIN

காங்கயம்: காங்கயத்தில் அரிசி ஆலை அதிபரின் மகன் கடத்தல் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணயத் தொகையாக கொடுக்கப்பட்ட ரூ.3 கோடியில் இதுவரை ரூ.2.50 கோடி மீட்கப்பட்டுள்ளது

காங்கயம் அருகே காடையூரில் அரிசி ஆலை நடத்தி வருபவர் தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தி. இவருக்குச் சொந்தமாக காங்கயத்தில் பிரமாண்டமான திருமண மண்டபமும் உள்ளது. இவரது மகன் சிவபிரதீப் (22). இவர் அரிசி ஆலை நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில், சிவபிரதீப் மற்றும் அவரது கார் டிரைவரும் ஒரு காரில் காங்கயம் அருகே பாப்பினி-வீரசோழபுரம் பகுதியில் சென்று சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த 7 பேர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்டு, திண்டுக்கல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சென்று, காங்கயத்தில் உள்ள அரிசி ஆலை அதிபர் ஈஸ்வரமூர்த்தியை போனில் தொடர்பு கொண்டு, அவரது மகனைக் கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.3 கோடி பணத்தை கொடுத்து விட்டு, மகனை மீட்டுச் செல்லுமாறும் கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். போலீசுக்குப் போனால் தங்கள் பிடியில் உள்ள அவரது மகன் சிவபிரதீப்பை கொன்று விடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஈஸ்வரமூர்த்தி அன்று மாலை 7 மணியளவில் திண்டுக்கல் சென்று கடத்தல்காரர்களிடம் அவர்கள் கேட்ட பணம் ரூ.3 கோடியை கொடுத்து விட்டு, அவரது மகன் சிவபிரதீப், கார் ஓட்டுநர் சதாம் ஆகியோரை மீட்டு வந்தவுடன், இது தொடர்பாக காங்கயம் காவல் துறையில் புகார் தெரிவித்தார்.

உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக திண்டிவனம், குளமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (37), மதுரையைச் சேர்ந்த அகஸ்டின் (45), ஆந்திரா மாநிலம், நெல்லூர், ஏ.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (38) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் மதுரையிலும், கார் ஓட்டுநராக செயல்பட்ட கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சுக்குராஜன் என்பவரின் மகன் பஷீர் (31) என்பவரை கிருஷ்ணகிரியிலும் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

இதில், பாலாஜி, சக்திவேல் ஆகிய இருவரும் ஈஸ்வரமூர்த்தின் அரிசி ஆலையில், இந்தக் கடத்தல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு வரை ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த அகமது பாஷா என்பவரின் மகன் சையது அகமதுல்லா (48), திண்டுக்கல் மாவட்டம், பழனி கீரனூர் பகுதியைச் சேர்ந்த கலிபுல்லா என்பவரின் மகன் ஜாபர் சாதிக் (37) ஆகிய மேலும் இருவரை தனிப்படை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

 மீதம் ஒருவர் விரைவில் கைது: இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரில், இதுவரை 6 பேரை தனிப்படை போலீசார் இரண்டே நாள்களில் கைது செய்துள்ளனர். கடத்தல்காரர்கள் பணயப் பணமாக கொண்டு சென்ற ரூ.3 கோடியில் இதுவரையில், ரூ.2 கோடியே 49 லட்சத்து 99 ஆயிரத்து 500 மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் மீதமுள்ள நபரான மதுரையைச் சேர்ந்த பாலன் என்பவரையும் விரைவில் கைது செய்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.