

அவிநாசி: சேவூர் அருகே வலையபாளைத்தில் சனிக்கிழமை காலை சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானதில், பகவதி அம்மன் கோயில் முற்றிலும் இடிந்து சேதமானது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட வலையபாளையத்தில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சுயம்பு பகவதி அம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் வலையபாளையம், போலநாயக்கன்பாளையம், சிந்தாமணிப்பாளையம், நட்டுக்கொட்டையான்புதூர் உள்ளிட்ட பகுதி மக்களின் இஷ்ட தெய்வாக வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆடி, பங்குனி மாதங்களில் பொங்கல் வைத்து விழா நடத்துவது வழக்கும். மேலும் சேவூர்-கோபி பிரதான சாலையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் பேருந்து, லாரி, இருசக்கர வாகனங்கள், பனியன் நிறுவன பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் நாள்தோறும் காவல் தெய்வமாக வழிபட்டு செல்வர்.
இதேபோல சேவூர், போத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாடகை ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை வாகனங்களில் வந்து சிறப்பு வழிபாடும் செய்து வந்தனர்.
இந்நிலையில், சுற்றுலா சென்று விட்டு அவிநாசியில் இருந்து போத்தம்பாளையம் நோக்கி சென்ற சுற்றுலா வேன், எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பகவதி அம்மன் கோயில் மீது மோதியதில், இதில் சுயம்பு பகவதி அம்மன் கோயில் முற்றிலும் இடிந்து சேதமானது. பழமையான கோயில் முற்றிலும் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.