சென்னையில் முதற்கட்டமாக 2100 அரசு பேருந்துகளில் அவசர ஒலி அழைப்பு (பேனிக் பட்டன்) அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நிர்பயா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேருந்திலும் மூன்று இடங்களில் கண்காணிப்பு காமெராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல ஒவ்வொரு பேருந்திலும் 4 அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் அமைக்கப்படும். இதன் மூலம், பணிமனைக்கு தகவல் உடனடியாகப் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச அழைப்பு எண்களை அனைத்து பேருந்துகளும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
பேருந்துகளில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள் என பல தரப்பினரும் பேருந்தில் பயணம் செய்வார்கள். ஆனால் சில நடத்துநர்கள் அவர்களை இறக்கிவிடுகின்றனர். எனவே, இது தொடர்பாக நடத்துநர் ஓட்டுநர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்குவது, ஆர்.டி.ஓ. மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி போன்று பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 29 ம் தேதி அங்கீகரிக்கப்படும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தபடும் என்றார்.