திருச்செந்தூர்: தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர்வெட்டு திருவிழாவின் முக்கிய நாள்களான நாளை, நாளை மறுநாள் (டிச.16,17) ஆகிய இரு நாள்களுக்கு மட்டும் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வருவதற்கு அனுமதியில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குதிரைமொழி கிராமம், தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர்வெட்டு திருவிழா கடந்த 17.11.2021 அன்று தொடங்கி வருகிற 17.12.2021 அன்றுடன் நிறைவடைகிறது.
தற்போது தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டும், பரவி வரும் உருமாறிய கொரோனா (ஒமைக்ரான்) வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதியும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31.12.2021 அன்று வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனால் திருவிழாவின் முக்கிய நாள்களான 16.12.2021 (வியாழக்கிழமை) மற்றும் 17.12.2021 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாள்களுக்கு மட்டும் பக்தர்கள் யாரும் அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலுக்கு வருவதற்கு அனுமதி இல்லை என திருக்கோவில் நிர்வாகம் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருவிழாவை காண 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய இரு தினங்கள் பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.