
சென்னையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் மழைநீர் தேங்கியிருப்பதால் சென்னை தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை பெய்து ஓய்ந்திருந்த நிலையில் வியாழக்கிழமை நண்பகலில் இருந்து சென்னை முழுவதும் திடீரென பலத்த மழை பெய்து தண்ணீா் சாலைகளில் தேங்கியது.
இதனால் நகரின் பிரதான சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது.
இத்தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த முடியாததினால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளானாா்கள்.
சாலைகளில் சில இடங்களில் தண்ணீா் இடுப்பளவுக்கு தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊா்ந்து செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.
பலத்த மழையின் காரணமாக கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை ஆகியவற்றில் பல அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியது. இதனால் பாதுகாப்புக் கருதி, இந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 32 மின்மாற்றிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கியிருப்பதால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்ததும் 1 மணி நேரத்தில் மின் விநியோகம் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.