தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்தது மனிதாபிமானம் இல்லாத செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே 68 இந்திய மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிக்க- தமிழ்நாட்டு மக்களை சுற்றியே எனது எண்ணங்கள் உள்ளன: ராகுல் காந்தி
இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்தது மனிதாபிமானம் இல்லாத செயல். மீனவர்களை தனிமைப்படுத்தி அதன்பின்னர் கரோனா பரிசோதனை செய்திருக்கலாம். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
பொங்கலுக்கு முன்பாகவே தமிழக மீனவர்களை மத்திய அரசு அழைத்து வரும் என நம்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது. மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 68 மீனவர்களும் அவர்களது குடும்பத்துடன் தொலைப்பேசியில் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதிலளித்தார்.