நாமக்கல்: கட்டுமான பொருள்கள் விலையேற்றம், தனி ஒழுங்குமுறை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் நாமக்கல் மையம் சார்பில் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.
கட்டுமான பொருள்கள் விலை அதிகப்படியாக உயர்ந்துள்ளது. இரும்புக் கம்பிகள் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. பிவிசி பைப் 70 சதவீதம், மூலப்பொருள்கள் மற்றும் காப்பர் ஒயர் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. பெயிண்டின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்த விலையேற்றத்தால் சுமார் 5000 தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகள் இப்பிரச்னையில் தலையிட்டு கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்டுனர்கள் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
இதில் கட்டுனர் சங்க நிர்வாகிகள் சி. கணேசன், வி.எஸ். தென்னரசு, நடராஜ், வி.எஸ்.டி. ராஜா, அன்பழகன், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.