சென்னை: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ப. சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ப. சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து, அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் ராஜ கண்ணப்பனும் போட்டியிட்டனர். இத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ கண்ணப்பனை விட 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்த தேர்தலில் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ராஜ கண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2009 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பளித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.