சென்னை: சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், நிகழாண்டில் 4,838 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன.
அதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல், 20 தனியார் கல்லூரிகளில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தப் படிப்புகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
விண்ணப்ப அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், 4,838 விண்ணப்பங்கள் வந்திருப்பதாக பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் மலர்விழி தெரிவித்தார். அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,492 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,346 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று டாக்டர் மலர்விழி தெரிவித்தார்.