

சசிகலாவை தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மை மற்றும் உருவப்படத்தை மயிலாடுதுறை அருகே ஆனைமேலகரம் ஊராட்சியில் அண்ணா திராவிடர் கழகம், அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சியினர் மற்றும் கிராம மக்கள் எரித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சசிகலா குறித்து அவதூறாக பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் ஜெய்ஆனந்த் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் சசிகலாவை தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு மயிலாடுதுறை அருகே ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அண்ணா திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் கிளைச் செயலாளர்கள் ஆர்.எஸ்.ரமேஷ், கே.எம்.அஸ்ரப் அலி, ஏ.கங்காதரன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஆர்.எஸ்.ராஜா, அமமுக சார்பில் மாவட்ட பிரதிநிதி வி.ராஜா, ஊராட்சி செயலாளர் ஆர்.தாமோதரன், ஆர்.ராஜ்குமார், பாமக சார்பில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் என்.பி.எஸ்.பிரசன்னா மற்றும் திரளான கிராமமக்கள் பங்கேற்று உதயநிதி ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினின் உருவபொம்மையைக் கொளுத்தியதை குத்தாலம் காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.