மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடிவீரர்கள் பங்கேற்பது வழக்கம் அதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் பங்கேற்பர்.
நிகழ் ஆண்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படுகிறது. மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் 655 பேருக்கும், 700 காளைகளுக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலங்காநல்லூரில் வெள்ளிக்கிழமை இரவே காளைகளுடன், காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீர்ர்களும் குவியத் தொடங்கினர்.
காலை 8.25 மணிக்கு கோவில் காளைகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செய்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து போட்டிக்குரிய காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன.
மாடுபிடிவீரர்கள் ஒரு சுற்றுக்கு 75 பேர் வீதம் தனித்தனி குழுவாக களமிறக்கப்படுகின்றனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவர்.
அதிக காளைகளை அடக்கும் வீரர்கள், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் இருவரும். தலா ஒரு கார் பரிசாக வழங்குகின்றனர்.