ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

வேதா நிலையத்தை அரசுடமையாக்கி இயற்றப்பட்ட  சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லம் வியாழக்கிழமை  (ஜன.28) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி இயற்றப்பட்ட  சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில், வேதா நிலையத்தையும், அங்கு உள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க  சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக  சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த  சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்.  நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளதாக, அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாராணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி, தீபக் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டார். 

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கமான முறையில் அடுத்த திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com