சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி என்பவரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை, மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், புகார் கொடுத்துள்ள நடிகை நன்றாக படித்தவர். எழுதப் படிக்காத தெரியாதவர் இல்லை. எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், திருமணம் செய்வதாக கூறி உறவு வைத்துக் கொள்வது கற்பழிப்பு ஆகாது என கூறியுள்ளது. எனவே, தனக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 2 வாரங்களுக்கு காவல்துறை முன் தினமும் ஆஜராக வேண்டும். கடவுச் சீட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.