வைகோ மீதான வழக்கு ரத்து

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
வைகோ மீதான வழக்கு ரத்து

சென்னை: பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைதை கண்டித்து  போராட்டம் நடத்தியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி குறித்து  வெளியான நக்கீரன் கட்டுரைகளில் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆளுநர் மாளிகை அதிகாரி அளித்த புகாரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்ற போது காவலர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். இதனால் வைகோ தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சிந்தாதிரிப்பேட்டை காவலர்கள் அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,   வைகோ உள்பட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com