
ஈரோடு: வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்தியபடி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு எந்த ஒரு நிகழ்வும் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுவரை நாட்டுப்புற வாரிய பதிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் எந்த ஒரு உதவியும் வரவில்லை.
அரசு நிகழ்விலும், திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்களில் எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். 60 வயது மேற்ப்பட்ட கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்.
உதவித்தொகை பெறும் கலைஞர்கள் இறந்து விட்டால் அவர்களது குடும்ப வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாவட்டம் தோறும் 50 கலைஞர்களுக்கு இலவச கருவிகள் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மண்டல கலை பண்பாட்டு துறை அலுவலகங்கள் அமைத்து தர வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா, கரோனா நிவாரண உதவியாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் நாட்டுப்புற கலைஞர்களை பணியில் அமர்த்த பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.