கோவில் சொத்துகளை அபகரித்திருந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

கோவில்களின் சொத்துக்களை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் யானை பார்வதியை பார்வையிட்டு, பார்வதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு.
கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் யானை பார்வதியை பார்வையிட்டு, பார்வதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு.



மதுரை:  கோவில்களின் சொத்துக்களை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் யானை பார்வதிக்கு கண்களில் புரை ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து மருத்துவர்களிடமும் சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வெள்ளிக்கிழமை  ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவில் யானை பார்வதியை பார்வையிட்ட அமைச்சர், பார்வதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக கால்நடை மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். 

இதையடுத்து கோவிலுக்குள் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளுக்குச் சென்று தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து கோயிலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வசந்தராயர் மண்டபத்தையும் பார்வையிட்டு சீரமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் யானை பார்வதிக்கு ஓராண்டுக்கு முன்பு வலது கண்ணில் புரை ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இடது கண்ணிலும் புரை பரவி வருவதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டே சென்னையில் இருந்து மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளிக்க வர இருந்த நிலையில், கரோனா தொற்று பொதுமுடக்கம் போன்றவற்றால் சிகிச்சை அளிக்க இயலவில்லை. தற்போது யானைக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் தேவைப்படும் பட்சத்தில் பார்வதிக்கு  வெளிநாட்டில் இருந்தும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். தமிழக கோவில்களில் 30 யானைகள் மட்டுமே உள்ளன. எனவே கோவில் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியோடு உள்ளார். 

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்துள்ள வீர வசந்தராயர் மண்டப புனரமைப்புப் பணிகள் கரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகியுள்ளது. தற்போது புணரமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டு விரைவில் பணிகள் முடிக்கப்படும். வீர வசந்த ராயர் மண்டப பணிகள் முடிந்த பின்னர் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கப்படும். 

கோவிலுக்குச் சொந்தமான சொத்துகளின் பட்டியலை வெளியிட்டதுபோல கோவில்களில் உள்ள நகைகளை பற்றிய தகவல்கள் வெளியிடுவது பாதுகாப்பானது அல்ல என்பதால் நகைகளின் விவரங்களை வெளியிடவில்லை. ஆனால் நகைகள் உரிய ஆவணங்களுடன் பாதுகாப்பு அறைகளில் மிக பத்திரமாக உள்ளன. அறநிலையத்துறை கோவில்களில் சித்த மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

மலை மேல் உள்ள கோவில்களுக்கு ரோப்கார் அமைப்பதற்கான திட்டமும் உள்ளது. கோவில் நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை அபகரிப்பவர்கள் யாராக இருந்தாலும் திமுகவினராகவே இருந்தாலும் கூட பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகள் சட்டப்படி நிரூபிக்கபட்டால் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 

மேலும்  ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துகள் முழுமையாக மீட்கப்படும். தமிழகத்தில் அரசின் தீவிர நடவடிக்கையால் கரோனா தொற்று பாதிப்பு பெரிய அளவில் குறைந்து வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு இல்லாமல், கரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படாத நிலை உருவாகும்போது பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். 

ஆய்வின்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, ஏ.வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கோவில் இணை ஆணையர் க.செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com