சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற 21 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
திமுக அரசு பதவியேற்ற பின்னர் தமிழகத்தின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற 21 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரோனா பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆய்வு செய்தார்.
ஜூன் 21 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இதையடுத்து, இன்று காலை 10.30 மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டியும் அவருடன் சென்றிருந்தார்.
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவைத் தலைவர் அப்பாவு, 'சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநருக்கு முறையாக அழைப்பு விடுப்பது மரபு. அதன்படி, ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளேன். அவரும் கண்டிப்பாக வருவதாகக் கூறியிருக்கிறார்.
கூட்டத்தொடரில் ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பில்லாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படும்.
கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.