உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க மலைக்கிராம மக்களுக்கு எச்சரிக்கை

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை, அருநுாற்றுமலை கிராமங்களில் உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க மலைக்கிராம மக்களுக்கு எச்சரிக்கை

வாழப்பாடி: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை, அருநுாற்றுமலை கிராமங்களில் உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள காவல்நிலையம் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேலம் மாவட்டம்  வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை தொடர் பெரியக்குட்டிமடுவு கிராமத்தில், கடந்த இரு ஆண்டுக்கு முன் வனப்பகுதியையொட்டி இயங்கிய கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலையை வனத்துறையினர் உதவியோடு காவல்துறையினர் கண்டுபிடித்தனர். வனப்பகுதியில் அரிதாகி வரும் தோதகத்தி ஈட்டி மரத்தை வெட்டும் மர்ம கும்பல், கள்ளத்தனமாக நாட்டுரகத் துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

இதனால், அருநுாற்றுமலை மற்றும் கல்வராயன் மலை கிராமங்களில் உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கிகள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கலாமென தெரியவந்ததால், அப்போதைய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வனத்துறையினருடன் இணைந்து, 30க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், சின்னகல்வராயன், பெரியகல்வராயன், அருநுாற்றுமலை, பெலாப்பாடி மலை, பெரியகுட்டிமடுவு, சந்துமலை, மண்ணுார்மலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக, உளவுத்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

இத்தகவலறிந்த, தற்போதைய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், அனைத்து மலைக் கிராமங்களிலும் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கிராம நிர்வாக 
அலுவலரிடம் ஒப்படைக்க, அந்தந்த பகுதி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, வாழப்பாடி காவல் உட்கோட்டத்திலுள்ள கல்வராயன்மலை கருமந்துறை, கரியகோவில், காரிப்பட்டி, ஏத்தாப்பூர் மற்றும் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து மலைக் கிராமங்களிலும், உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள், துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டுமென டாம் டாம் மூலம் தண்டோரா போட்டும், துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கியும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஓரிரு தினங்களுக்குள் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை தானாக முன்வந்து ஒப்படைக்கத் தவறினால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், அனைத்து கிராமங்களிலும் அதிரடி சோதனை நடத்தி துப்பாக்கிகளை பறிமுதல் செய்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஓரிரு தினங்களில் கருமந்துறை, கரியகோவில், வாழப்பாடி, ஏத்தாப்பூர், காரிப்பட்டி ஆகிய காவல் நிலையங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம், உரிமம் இல்லாத துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படலாமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com