நாகர்கோயில்: ஒரு கலாசாரம், ஒரு நாடு மற்றும் ஒரு வரலாறு என்ற கருத்தை முன்வைக்கும் சக்திகளை ஒதுக்கி வைப்பதில் தமிழகம் இந்தியாவுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மோடி அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
அவர் பேசுகையில், மொழி மற்றும் கலாசசாரத்திற்கு விரோதமான சக்திகளையும், "ஒரு கலாசாரம், ஒரு நாடு மற்றும் ஒரு வரலாறு" என்ற கருத்தை முன்வைக்கும் சக்திகளையும் ஒதுக்கி வைப்பதில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், தமிழக மக்களின் பிரதிநிதியாக இருப்பவரே தமிழக முதல்வராக வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும். ஆனால் மோடிக்கு அடிபணிந்து இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் இதனைச் செய்ய முடியாது. ஒரு முதல்வர் என்றால் அவர் மக்களுக்காகவே இருக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் மோடியின் பிரதிநிதியாக இருக்கிறார். மோடி என்ன சொல்கிறாரோ அதையே இவர் செய்கிறார்.
ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி, தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் அவமதித்துள்ளனர் என்று கூறினார் ராகுல்.