காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் மீது பெண் எஸ்பி அளித்த பாலியல் புகார் காவல் துறையினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதுதொடர்பான வழக்கு சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையை நேரடியாக கண்காணிப்போம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், சிபிசிஐடி போலிஸார் தங்களது விசாரணையை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முத்தரசி தலைமையில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 பேர் கொண்ட குழுவினர் இந்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது, சம்மந்தப்பட்ட பெண் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறக்கூடும் எனத் தெரிகிறது. அதைத்தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ளவர்களிடமும் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணைக் குழுவினர் அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.