வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மிதந்த கேனில் இருந்த சாராயத்தைக் குடித்த மீனவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இருவர் இன்று காலை ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு மீனவர் மதியம் உயிரிழந்தார்.
கோடியக்கரை கடற்கரையிலிருந்து மார்ச். 1 ஆம் தேதி கடலுக்குள் சென்ற படகில் 6 மீனவர்கள் இருந்துள்ளனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துள்ளனர்.
அப்போது அங்கு மிதந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த சாராயத்தை சிலர் குடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மூவர் மயக்கமடைந்த நிலையில், மற்ற மீனவர்கள் படகுடன் கோடியக்கரை வந்தடைந்தனர்.
இதில், தங்கச்சிமடம் அந்தோணி (38) உயிரிழந்தது இன்று காலை தெரிய வந்தது.
நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆரோக்ய புரோஸிஸ் (40) என்பவர் உயிரிழந்தார்.
இதையடுத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
இதனிடையே, வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீனவர் வினோத் (26) நாகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரும் மதியம் உயிரிழந்தார்.