தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கில் இயக்குநர் மாரிசெல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணியில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படத்தின் 'பண்டாரத்தி புராணம்' பாடல் கடந்த 2-ம் தேதி வெளியானது.
பாடல் வெளியான சிலமணி நேரங்களில் சமூக வலைதளங்களில் இப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்பாடலில் குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிப்பிடும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதால், பண்டாரத்தி புராணம் பாடலை படத்தில் இருந்து நீக்கக்கோரி புல்லட் பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.
பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கும் வரை கர்ணன் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 18) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத் தணிக்கைத் துறை மண்டல அலுவலர், இயக்குநர் மாரிசெல்வராஜ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மற்றும் திங்க் மியூஸிக் இந்தியா யூ-டியூப் சேனலுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.