கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்திற்காக கேரளம் மாநிலத்திலிருந்து ஜீப் வாகனங்கள் வந்ததுள்ளன.
தேனி மாவட்டம், கேரளம் மாநிலம் அருகே உள்ளது, இங்கு பயணிகள் போக்குவரத்திற்கு ஜீப் வாகனங்கள் அதிக பயன்பாட்டில் இருக்கும். தற்போது கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத்தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை முதல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானவுடன் தீவிரமடையும். இதற்காக அருகே உள்ள கேரளம் மாநிலமான இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்தல் ஒலி பெருக்கி பிரசாரத்திற்கு தேனி மாவட்டமான போடிக்கு வந்துள்ளது.
இது பற்றி அரசியல் பிரமுகர் ஒருவர் கூறும்போது, லாங் சைஸ் ஜீப் வாகனத்தில், கேரளத்தில் இருந்து ஒலி பெருக்கி கட்டிக்கொண்டு வந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் ஜீப் வாகனம் பிரித்து கொடுக்கப்படும் என்றார்.
இது பற்றி தேனி மாவட்ட்ததைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ள கேரளம் மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளது. இந்த வாகனங்களுக்கு வாடகை நாளொன்றுக்கு ரூ.2,800. அதே நேரத்தில் ஓட்டுநர் படி, சாப்பாடு, தங்கும் வசதி, எரிபொருள் போன்றவைகளை கட்சியினரே ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.
ஏற்கனவே, கரோனா தொற்று காலம் முதல் சுமார் 10 மாத காலமாக தேனி மாவட்ட வாடகை கார் ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்தில் உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் உள்ளூர் வாடகை வாகனங்களை பயன்படுத்தாமல் கேரளம் மாநில வாகனங்களை கொண்டு வந்து பயன்படுத்துவது வேதனையை தருகிறது. எங்கள் குடும்பத்தாரின் வாக்குகளை யாருக்கு பதிவு செய்வது என்று வருத்தத்துடன் கூறினார்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கு உள்ளூர் வாகனங்களை பயன்படுத்தாமல் கேரளம் மாநில வாகனங்களை பயன்படுத்துவது உள்ளூர் வாகன ஓட்டிகளிடையே குமுறலை ஏற்படுத்தியுள்ளது.