திருவாரூர்: ஆழித்தேரில் தியாகராஜர் திருவீதியுலா
திருவாரூரில், பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டம் தொடங்கியது.


திருவாரூரில், பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டம் தொடங்கியது.
நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி இந்த ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.
கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தேரோட்டம் நடைபெற்று வருகிறது என்பதை திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகம் மூலம் அறிய முடிகிறது. 1748 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆழித்தேரோட்டம் குறித்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 1765-இல் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, ஆழித் தேரோட்டத்தில் பங்கேற்றது தொடர்பான குறிப்புகளும் உள்ளன.
தஞ்சை அரண்மனை சரஸ்வதி மஹாலில் உள்ள மராட்டிய மன்னர் காலத்து ஆவணம் ஒன்றில், திருவாரூர் தியாகராஜ சுவாமி பங்குனி ரதோஸ்தவம், மாசி மாதம் 8-ஆம் தேதி முதல் சித்திரை இரண்டாம் தேதி வரையிலும் 55 நாள் உத்சவ விவரங்கள் என 1843-இல் நடைபெற்ற பங்குனி உத்ஸவ விழா பற்றி தெரிவிக்கிறது.
ஹஸ்த நட்சத்திரத்தில் துவஹாரோஹணம் எனும் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தோராட்டம் நிகழ்த்தி, உத்திரத்தில் தீர்த்தம் அருளி, உத்திராடத்தில் விழா பூர்த்தி என்பது திருவாரூர் பங்குனித் திருவிழா குறித்த சொல்மொழி ஆகும்.
இது 36 நாள் திருவிழாவாகும். இதுதவிர, விழா தொடக்கத்துக்கு முன்பு பூர்வாங்கம் ஒரு நாள், ஐயனார் திருவிழா 5 நாள், மீண்டும் பூர்வாங்கம் ஒருநாள், பிடாரி திருவிழா 10 நாள், பூர்வாங்கம் 2 நாள் என கொண்டாடப்பட்டு அதன்பிறகு பங்குனிப் பெருவிழா 36 நாள்கள் என மொத்தம் 55 நாள்கள் விழா நடைபெற்றுள்ளது.
அதன்பிறகு காலமாற்றத்தில் பங்குனி ஆயில்ய நட்சத்திரம் அல்லாமல் பல்வேறு காலகட்டங்களில் தேரோட்டம் நடைபெற்று வந்தது. இது, பக்தர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. எனவே, ஆகம விதிகளை மாற்றக்கூடாது, ஆயில்ய நட்சத்திரத்திலேயே தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நிகழாண்டு திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஆயில்ய நட்சத்திரமான மார்ச் 25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தினசரி ஆகம விதிகளை பின்பற்றி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஆழித்தேரோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, தருமை ஆதீனம், வேளாங்குறிச்சி ஆதீனம், இணை ஆணையர் க. தென்னரசு, உதவி ஆணையர்கள் இரா. ஹரிஹரன், ப. இராணி, பரம்பரை அறங்காவலர் ராம். தியாகராஜன், கோயில் செயல் அலுவலர் கோ. கவிதா உள்ளிட்டோர் பங்கேற்று, ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
கீழவீதியிலுள்ள தேர்முட்டியிலிருந்து, ஆரூரா, தியாகேசா பக்த கோஷங்கள் விண்ணைத் பிளக்க, பச்சைக்கொடி அசைய, மக்கள் வெள்ளத்தின் மத்தியில் அசைந்து, அசைந்து நகரத் தொடங்கியுள்ளது திருவாரூர் தியாகராஜர் கம்பீரமாக வீற்றிருக்கும் ஆழித்தேர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...